அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும் சுனில் அரோராவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. மூத்த தேர்தல் ஆணையர்தான் வழக்கமாக தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வருகிறார். இதனால் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சுஷில் சந்திரா நியமிக்கப்பட இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான உத்தரவு எப்போது வேண்டுமானாலும் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக 2019 பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டார். வரும் 2022 மே 14ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.
கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிகிறது. உத்தர பிரதேச அரசின் பதவிக்காலமும் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்த 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் சுஷில் சந்திரா தலைமையின் கீழ் நடைபெறும். தேர்தல் ஆணையர் பதவியை வகிப்பதற்கு முன்பு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக சுஷில் குமார் இருந்தது குறிப்பிடத்தக்கது.