பாமகவினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பலத்த பாதுகாப்புடன் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயத்திற்கு எதிரான குறியீடுகள் இடம்பெற்றதாக, அந்தப் படத்திற்கு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்டன. அதன் தொடர்ச்சியாக சூர்யாவின் நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்‘ திரைப்படத்திற்கு பாமக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வன்னியர் சமுதாய மக்களிடம் நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்ட திரையரங்குகளில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை அனுமதிக்கக் கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களிடம் பாமக-வினர் மனு அளித்தனர். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் இன்று அந்தப் படம் வெளியானதையடுத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிடக் கூடாது என பாமக சார்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மீறி வெளியிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாமகவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று கரூரில் 4 திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இதனையடுத்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பாமக-வினரின் எதிர்ப்பை மீறி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்த போதும் அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாமக-வினரின் எதிர்ப்பால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடாததால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பட வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்காகக் காத்திருந்தபோது திரையரங்கு உரிமையாளர்கள் படம் வெளியாகவில்லை எனக் கூறிய நிலையில் ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்தத் திரையரங்கும் முன்பு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.