தேர்தலில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளின் விரக்தியால் தன் இருப்பைக்
காட்டிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசி
வருகிறார் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவிற்கு தேர்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய தோல்விகளால் விரக்தியின்
அடிப்படையில் திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழக அரசியலில் அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தே விட்டது. சசிகலா கூட இதை கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தன் இருப்பைக் காட்டிக்
கொள்வதற்காக அவசர அவசரமாக இன்று காலை ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார். அதில் தமிழ்நாடு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார்.
இந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசு எண்ணற்ற பல சாதனைகளை செய்துள்ளது. நம்மை காக்கும் 48, இல்லம் தேடி கல்வி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நான் முதல்வன் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, மகளிருக்கு இலவச பேருந்து, கொரோனா நிவாரண நிதி என இப்படி எண்ணற்ற பல திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார்.
ஆனால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல எடப்பாடி பழனிச்சாமி இந்த உண்மைகளை மறைத்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டி
இருக்கிறார். ஆனால் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மிகச் சிறப்பாக பராமரித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் கிடந்தது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.
திமுக ஆட்சியில் ஜாதி மத சண்டைகள் இல்லாமல் மிக அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் முற்றிலுமாக அழித்து வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 1695 கொலைகள் நடைபெற்றுள்ளது. கொள்ளைகள் 146,
கூலிப்படை கொலைகள் 30, போலீஸ் துப்பாக்கிச்சூடு 16 ஆக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் இவையெல்லாம் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை. அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து கொண்டு வரப்பட்ட சட்டம். அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அது உறுதியான சட்டமாக கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன்
ரம்மி ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் அதிக அளவில் புழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் அது எந்த அளவுக்கு பெரியதாக இருந்தது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். யார் வீட்டில் ரெய்டு நடந்தது? அதிமுக ஆட்சியில் காவல் துறை தலைவராக இருந்தவர் மீது வழக்குப் பாயவில்லையா?
கஞ்சா விற்பனை தடுக்கும் வகையில் 813 பெயரில் வங்கி கணக்குகள்
முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுபடுத்தி பேசி வருகிறார். திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார் தங்கம் தென்னரசு.
நாளை பாஜக தலைவர் அண்ணாமலை கோட்டையை நோக்கி முற்றுகையிடுவோம் என்று கூறியிருக்கிறார் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஜனநாயக நாட்டில் யார்வெனலும் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு அவர்கள் காவல் துறையை அணுகி உரிய அனுமதி பெற்று நடத்தலாம்” என்று தெரிவித்தார்.