காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பஞ்சாபில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிகளை முடிப்பதற்காக 263 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி எம்.கே. நக்பால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அர்ஷ்தீப் சிங், பிரதீக் சட்டா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
கார்த்தி சிதம்பரம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் சிபிஐ வசம் இல்லை என்றும், அதேநேரத்தில் சிபிஐ-ன் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறி அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி கபில் சிபல் வாதிட்டார்.
மேலும் ரூ. 50 லட்சம் நிதி மோசடி செய்துவிட்டதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர் ரூ. 1கோடியை முன்ஜாமீனுக்காக நீதிமன்றத்திற்கு செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே அவருக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, இந்த வழக்கில் இதுவரை தங்களுக்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், விசாரணைதான் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அப்படி இருக்கும்போது முன்ஜாமீன் கோருவது உகந்ததல்ல என வாதிட்ட அவர், இப்போதே அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.கே. நக்பால், தீர்ப்பு ஜூன் 3ம் தேதிக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதுவரை அவர் கைது செய்யப்படக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.