மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்றுள்ளார். புதிய பிரதமருக்கு முன் உள்ள சவால்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
மலேசிய பொது தேர்தல்
மலேசியா பொதுத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 222 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண் டு இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இறந்தததால், 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதுவரை 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் முறையாக வாக்களித்த 40 லட்சம் இளம் தலைமுறையினர் உட்பட சுமார் 2.1 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 70% வாக்கு பதிவாகியது. 
யாருக்கும் பெரும்பான்மை இல்லை
மலேசியாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 111 இடம் தேவை என்கிற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி – 82, பெரிக்காத்தான் – 73 இடங்களில் வெற்றி பெற்றன. தேசிய முன்னணி(பாரிசான்) 30 இடங்களிலும், ஜி.பி.எஸ் – 22 இடங்களிலும் ஜி.ஆர்.எஸ் கூட்டணி – 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. 97 வயதான முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது கெடா மாகாணம் லங்காவி தொகுதியில் போட்டியிட்டார். அவர் 4, 566 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை இழந்தார். சுமார் 50 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் வெற்றியை தொடர்ந்து கொண்டிருந்த மகாதீர் முதல்முறையாக படுதோல்வியை சந்தித்துள்ளார். இவர் மட்டுமின்றி இந்திய மலேசிய காங்கிரஸ் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர். 
இந்தியர்கள்/ தமிழர்கள் ஆதரவு
மலேசியாவில் தற்போது இந்திய வம்சாவளியினர் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 9 பேர் அன்வர் இப்ராஹிம் கூட்டணியில் உள்ளனர். எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் யார் அடுத்த பிரதமர் என்கிற தேர்வில் இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சி என்கிற அடிப்படையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர் அன்வர் இப்ராஹிம்
10வது பிரதமராக பதவி ஏற்க மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இன்று (24.11.2022) மாலை பதவி ஏற்றுக் கொண்டார். அன்வர் இப்ராஹிம் நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். கடந்த 1998ல் துணைப் பிரதமராக இருந்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மலேசிய அரசியல் களத்தில் 24 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். 
வீடியோ செய்தி – யார் இந்த அன்வர் இப்ராஹிம்?
பெரும்பான்மைக்கும் குறைவான இடம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி உள்ளிட்ட அரசியல் ரீதியிலான சவால்கள் ஒருபக்கம். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சவால்களும் அன்வர் இப்ராஹிம் முன் உள்ளன. சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- ஜோ. மகேஸ்வரன்







