மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை துர்கா பூஜை விழாவிற்காக விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விஜயதசமியையொட்டி நவராத்திரி பூஜை கொண்டாடப்படும். அப்போது இந்துக்கள் தங்களின் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவர். இந்த நவராத்தி பூஜையானது வட இந்தியாவில் துர்கா பூஜை என்றழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். துர்கா பூஜை என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும்.
இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி துர்கா பூஜை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், 3-வது ஆண்டாக துர்கா பூஜைக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவியை பெறுவார்கள் என மேற்கு வங்க முதலமைச்சர் பானர்ஜி அறிவித்துள்ளார்.







