2020- 21 ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு 88, 051 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கு விதமாக பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலி காட்சி வாயிலாக 19வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது பேசிய ராமதாஸ், 123 தலைப்பில் 481 பரிந்துரைகளை சொல்லியுள்ளோம் என்றும், இது தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கும் ஆலோசனை எனவும் கூறினார். இதில் சொல்லப்பட்டவை நிறைவேறினால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும் அவர் விவரித்தார்.
தொடர்ந்து, “2020- 21 ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு 88, 051 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இது மிகவும் அதிகம்” என்ற ராமதாஸ், செயலாக்கப்பட்ட திட்ட வரைவு மற்றும் பொருளாதார ஆய்வு ஆறிக்கை ஆகியவற்றை வெளியிட 18 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை, இந்த அரசாவது செய்யும் என எதிர்பார்கிறோம் என்றும் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
நிழல் நிதிநிலை அறிக்கையில், “பெண்களுக்கான நிதி நிலை அறிக்கை வெளியிட வேண்டும், வேலைவாய்ப்பை பெருக்க திட்டம், 5 ஆண்டுகள் வேலையில்லா இளைஞர்களுக்கு 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழர்களுக்கு மட்டுமே அரசு வேலை. ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 2, 000, நேர்முக தேர்வுகள் ரத்து. ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்” உள்ளிட்ட பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.







