34.5 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள்

வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!
நீயின்றி நான் இல்லை…
இது காதலர்களுக்காக எழுதப்பட்ட வாசகம் என்று எவரேனும் கூறினால், அவர் பாட்டாளிகளின் பாசம் அறியாதவர் என்று பொருள். உண்மையில் இந்த வாசகம் நமக்காக படைக்கப்பட்டது. உன்னையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்பதற்கான சாசனம் தான் இதுவாகும். இது வன்னியர் இடப்பங்கீட்டுக்கான போராட்டங்களுக்கும், அதில் நாம் வென்றெடுத்த வெற்றிக்கும் மிகவும் பொருந்தும்.


வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக 10.50% இடப்பங்கீட்டை வென்றெடுத்துள்ளோம். அதற்காக நாம் பட்ட பாடுகளைப் பற்றியும், நடத்திய போராட்டங்களைப் பற்றியும், 10.50% இடப் பங்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமுதாயத்திற்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் குறித்தும் நேற்றைய அறிக்கையில் மிகவும் விரிவாக விளக்கியிருந்தேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீயும் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதை நேற்று மாலை முதல் இரவு நான் உறங்கப் போகும் வரை இடைவிடாமல் வந்த தொலைபேசி அழைப்புகளில் இருந்தே நான் உணர்ந்து கொண்டேன். பாட்டாளி மக்கள் கட்சியின் முகம் தெரிந்த நிர்வாகிகள் முதல் எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்திலிருந்து எந்தக் கட்சி என்றே தெரியாத வன்னிய சொந்தங்கள் வரை பலரும் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள். பலருக்கு ஆனந்தத்தின் மிகுதியால் பேச வார்த்தைகள் வரவில்லை. வேறு பலரோ, ‘‘ அய்யா… நீங்கள் தான் எங்களுக்கு எல்லாம்’’ என்பதில் தொடங்கி, ‘‘அய்யா…. நீங்கள் தான் எங்கள் குல தெய்வம்’’ என்பது வரை உருகினார்கள். நான் நேற்று கூறியதைப் போல ஆனந்தக் கண்ணீரில் மட்டுமின்றி உங்கள் அன்பு மழையிலும் நனைந்தேன்.


ஆனால், இந்தக் கடிதத்தின் முதல் பத்தியில் கூறியதைப் போன்று பாட்டாளியான உன்னையும், என்னையும் நான் ஒருபோதும் பிரித்துப் பார்த்ததில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தின் வயது 82. இதில் முதல் 40 ஆண்டுகளை எனது கல்வி, பணி, குடும்ப வாழ்க்கைக்காக செலவிட்டேன். அடுத்த 42 ஆண்டுகளை உனக்காகவும், உன் நலனுக்காகவும் தான் அர்ப்பணித்திருக்கிறேன்.


அதைப் போலவே தான் நீயும் சமுதாய நலன் கருதியும், அதன் வழியாக தமிழகத்தின் நலன் கருதியும் என்னுடன் இணைந்து பயணித்து வருகிறாய். வன்னியர்களுக்கான 10.50% இடப்பங்கீடு எனது வெற்றி என்று எந்த நாளிலும் நான் நினைத்ததில்லை. அது உனது வெற்றி… அது நமது வெற்றி. நீயில்லாமல் இந்த சமூக நீதி வெற்றி சாத்தியமாகியிருக்காது என்பது தான் உண்மை.


நாம் பாட்டாளிகள்… பணக்காரர்கள் அல்ல. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வென்று எடுக்க வேண்டும் என்பதற்காக நான் சொன்னதையெல்லாம் நீ செய்து முடித்தாய். கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டுப் பொதுக்குழு இணையவழியில் நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தோம். ஆனாலும், என்ன போராட்டம் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகம் முன் திசம்பர் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்று திசம்பர் 25-ஆம் நாள் தான் அறிவித்தேன். அடுத்து இருந்தது 5 நாட்கள் அவகாசம் மட்டும் தான். அதற்குள் பேருந்துகள், மூடுந்துகள், மகிழுந்துகள் என எந்தெந்த ஊர்திகள் எல்லாம் கிடைத்தனவோ, அவை அனைத்தையும் பதிவு செய்து கொண்டு திசம்பர் ஒன்றாம் தேதி அதிகாலையில் சென்னைக்கு திரண்டு வந்து விட்டீர்கள். அதற்கான செலவுகளுக்கு எல்லாம் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், செலவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நமது உரிமைக்காக மருத்துவர் அய்யா அழைக்கிறார் என்ற உணர்வு, உங்களை அனைத்து தடைகளையும் தாண்டி சென்னைக்கு அழைத்து வந்தது. உங்களின் இந்த உணர்வு தான் நாம் நமது சமூகநீதிப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு காரணம். இது தான் உண்மை.


சென்னையுடன் மட்டும் நமது போராட்டம் நிறைவுபெறவில்லை. அடுத்தடுத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நமது சமூகநீதி போராட்டம் தொடர்ந்தது. மொத்தமாக இரு மாதங்களில் 6 கட்டங்களாக 9 நாட்களுக்கு போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியாலும் இத்தகைய போராட்டங்களை நடத்த முடியாது. இது தான் நமது வலிமை… இது தான் நமது பெருமை. போராட்டங்களங்களிலேயே வாழ்க்கையை நடத்த நம்மால் தான் முடியும். இந்த உணர்வு தான் நமக்கு சமூகநீதி வெற்றியை கொடுத்திருக்கிறது.


அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்… நீயின்றி நான் இல்லை. நீ இன்றி நமது சமூகநீதிப் போராட்டத்தின் வெற்றி சாத்தியமில்லை. வன்னியர்களுக்கு இடப்பங்கீட்டை வென்றெடுத்த சாதனைக்கு ஒவ்வொரு பாட்டாளியும் சொந்தக்காரர்கள் தான். உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பு மற்றும் உறுதுணையுடன் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். இது உறுதி.
கடந்த சில மாதங்களை போராட்டக்களத்தில் கழித்த நாம் இப்போது கொண்டாட்ட களத்திற்கு வந்திருக்கிறோம். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக செல்லுங்கள்… நாம் வென்றெடுத்துள்ள சமூகநீதி சாதனைகளை எடுத்துக் கூறி, அதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் வீட்டில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள். அடுத்தக்கட்டமாக வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டின் பயன்களை விளக்கும் துண்டறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தலைமை வடிவமைத்து அனுப்பும். அதை அனைத்து சொந்தங்களின் வீடுகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். நாம் இன்னும் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் நாம் வென்றெடுப்போம். நான் எனது முத்துவிழாவில் கூறிய அதே வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வழங்குகிறேன்.
என்னை நோய் அதிகம் தாக்காமலிருந்தால்,
கோல்களை ஊன்றிச் சென்றாவது
இந்த ஊமை சனங்களுக்காக
நான் இறுதி வரை போராடுவேன்!’’

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading