நடுக்காட்டில் வைத்து வேட்டை பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கக் கூடாது என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயங்களுடன் குட்டிப்புலி பிடிபட்டது. இந்தப் புலிக்கு மானாம்பள்ளி வனப் பகுதியில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட கூண்டில் உணவு வழங்கப்பட்டு வந்தது. வேட்டையாடத் தெரியாத இந்தப் புலிக்கு வேட்டை பயிற்சி அளிக்கப்பட்டபோது மேல் தாடை வேட்டை பல் உடைந்துவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், அந்தப் புலிக்கு வாயில் சீழ் பிடித்து உள்ளதால் புலி சாப்பிட முடியாமல் தவித்து, உடல் நிலை பாதிக்கப்பட்டது. தற்போது புலிக்கு அறுவை சிகிச்சை செய்து பல்லை முற்றிலும் அகற்றும் பணி நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக புலிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வனத் துறையினர் மற்றும் மருத்துவர்கள் வந்து புலிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புலியை வண்டலூர் உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பி நவீன சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடுக்காட்டில் வைத்து வேட்டை பல் இல்லாத புலிக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்க கூடாது என்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா