ஆவின் நிறுவனம், புதிதாக தயாரித்துள்ள பாயசம் மிக்ஸ் உள்ளிட்ட 5 வகை பால் உணவு பொருட்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆவின் நிறுவன தயாரிப்பான பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, ஈரோட்டில் 3.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 லட்சம் மற்றும் மத்திய பங்களிப்பாக ரூ.67.50 லட்சம், என மொத்தம் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலை அமைகப்பட்டுள்ளது.