கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி , ரோனால்டாவிற்கு அடுத்து அதிக கோல் அடித்த இந்தியரை பற்றி உங்களுக்கு தெரியுமா..? வாருங்கள் விரிவாக காணலாம்.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை தெரியாத குக்கிராமங்களே இல்லை. சச்சின் டெண்டுல்கரின் வலராறு பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. தோனியின் கிரிக்கெட்டை மைதானத்தில் பார்ப்பதற்கு விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட் வாங்குகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை விட இந்தியாவில் கூடுதல் மதிப்பு ஏனோ கிரிக்கெட்டிற்குத்தான். பேருந்துகளே போகாத கிராமத்தில் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் சட்டையின்றி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக இந்தியாவில் கிரிக்கெட் உள்ளது.
ஆனால் இந்தியாவில் கால் பந்து அணி ஒன்று உள்ளது என்று உங்கள் யாருக்காவது தெரியுமா..? இதற்கு பெரும்பாலானோரின் பதில் இல்லை என்பதுதான். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக கோப்பையை தன் வசமாக்கியது. இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் உட்பட அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் இவர்கள் யாருமே இந்திய கால்பந்து அணி ஒன்று இருப்பதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.
கடந்த மாதம் நான்கு நாடுகள் மோதிய கால்பந்து போட்டியில் சீனாவின் தைபே அணியை 5-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அணியின் கேப்டன் சுனில் சேத்ரி மூன்றாவது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உலக சாதனை படைத்தார். மிக முக்கியமான இந்த ஆட்டத்தை 2000க்கும் குறைவான ரசிகர்கள் மட்டுமே மைதானத்தில் பார்த்தனர். இந்த வெற்றிக்கு பின்னர் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் ” கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் தரமில்லாத போட்டியை பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.
இந்திய கால்பந்தின் அணி மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு ரசிகர்கள் நீங்கள் தேவை” என உருக்கமான பேசியிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகி இதற்கு சச்சின், விராட் கோலி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை அன்று தெற்காசிய கால்பந்து போட்டியில் குவைத்தை வீழ்த்தி இந்திய அணி 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய கால்பந்து அணியின் இந்த வெற்றி பரவலாக பேசப்பட்டது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அணியின் கேப்டன் சுனில் சேத்ரிதான்.
கடந்த 20 வருடங்களாக இந்திய கால்பந்து அணியை கட்டிக் காத்து வரும் சுனில் சேத்ரி கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி , ரொனால்டோவிற்கு பிறகு அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை தேடித் தந்துள்ளார். ரொனால்டோ 200 போட்டிகளில் 123 கோல்கள் அடித்துள்ளார், மெஸ்ஸி 175 போட்டிகளில் 103 கோல்களும், இதற்கு அடுத்ததாக சுனில் சேத்ரி 143 போட்டிகளில் 93 கோல்களை அடித்துள்ளார்.
ஒருகாலத்தில் இந்திய கால்பந்து அணி ஃபிபா தரவரிசை பட்டியலில் 173வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா 97வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது சாதாரண முன்னேற்றம் அல்ல. இதற்கான இந்திய அணியின் உழைப்பு மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக கேப்டன் சுனில் சேத்ரியின் பங்கு பேசப்பட வேண்டிய ஒன்று.