கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் வரும் குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து , கைப்பேசியில் OTP எண் கேட்கப்பட்டால் பகிர வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா இன்று (15.09.2023) நடைபெறுகிறது. 1000 ரூபாய் மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ATM கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரும் குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து OTP எண் கேட்பதாக புகார்கள் வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்திட்டத்தில் பயனடைவதற்கு OTP எண் ஏதும் நடைமுறையில் இல்லை. இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகையினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் OTP எண் பகிருமாறு அழைப்பு வந்தால் அந்த கைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொகை வரப்பெறாதவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை அணுகி விவரத்தினை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.