மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நிறைவுரையாற்றினார்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து மூன்றாம் நாளான இன்று மாநாடு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அதில், “சாதி மோதல்களை சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்காதீர்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அது சமூக ஒழுங்குப் பிரச்னை. படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல
படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் இருக்குற ஒரு சிலராலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். ஆக்கப்பூர்வமான வழிகள், விளையாட்டுப் போட்டிகள், ஊர்காவல் படைகள் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், “கல்குவாரி தொழிலால் ரவுடிகள் வளருவதில்லை. தொழில் போட்டி காரணமாக வேண்டுமானால் உருவாகலாம். அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது. அதேபோல் ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என்று பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக் கூடாது. குடிசைப் பகுதியில் கஞ்சா விற்பனை நடக்கிறது என்று இதுபோன்ற அடையாளப்படுத்தல்கள் செய்யக்கூடாது. ரவுடிகளைக் கட்டுப்படுத்த ‘வெளிச்சம்’, ‘உதயம்’, ‘விடியல்’ ஆகிய திட்டங்களை அமல்படுத்தி வருவதாகத் தாம்பரம் ஆணையர் சொன்னார். அதனை மற்றவர்களும் பின்பற்றலாம்” என்றார்.
மேலும், “இந்த ஆட்சி மக்களுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொண்டே வருகிறது. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் எல்லாம் என்னால்தான் என்று நினைக்கின்ற அளவிற்கு நான் நிச்சயமாக இருக்க மாட்டேன், இருக்கவும் இல்லை. என்னைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள், துறைகளின் செயலாளர்கள் இருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஆகிய நீங்களும் இருக்கிறீர்கள். நாம் அனைவரும் சேர்ந்ததுதான் இந்த அரசு” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்