புதிய மின்சார திருத்த சட்டத்தை திமுக தொடர்ந்து எதிர்க்கும்- அமைச்சர்

மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக மாணவரணியை சார்ந்த அனைத்து அமைப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும்…

மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட திமுக மாணவரணியை சார்ந்த அனைத்து அமைப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டம் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகள், விசைத்தறி, குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இதை வாபஸ் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை சொல்லி இருக்கின்றார். அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது அவருக்கு தெரியவில்லை போல அதிமுகவினரின் எஜமானர் பா.ஜ.க. சொல்வதை தான் அதிமுக செய்யும்.

கோவையை பொறுத்த வரை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள 3041 பூத் வாரியாக பணிகளை துவங்கி இருக்கின்றோம். கோவை மாவட்டத்தில் உள்ள 31 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் வாக்காளர்கள் திமுகவினர் என்ற நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றோம். ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தேதிகளில் திராவிட பயிலரங்கம் கோவை மாவட்டத்தில் நடைபெறுகின்றது. பயிலரங்குகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழைத்து வர அறிவுறுத்தி இருக்கின்றோம்.

கோவை மாவட்டத்திற்கு புதிய கட்சி அலுவலகம் கட்ட ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. அவனாசி சாலையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டிட்டம் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அடிக்கல் மிக விரைவில் நாட்டப்படும். இளைஞரணி செயலாளர் அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவித்தார்.

மேலும், வரும் 23 ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகின்றார். 24ம் தேதி கிணத்துகடவு பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் நலத்தட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை பொள்ளாச்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெறுகின்றது. மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள், புதிய உறுப்பினர்கள் 50 ஆயிரம் இணைய இருக்கின்றனர்.
அன்றைய தினம் முக்கிய நபர்கள் யார் இணைகின்றனர் என்பதை 24 ம் தேதி மேடையில் பாருங்கள் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.