திமுகவினர் விளம்பரத்திற்கு செய்யும் செலவை தவிர்த்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில நெசவாளர் அணி சார்பில் நெசவாளர் அணி செயலாளர் நாகராஜன் ஏற்பாட்டில் கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் வழங்கும் விழா மற்றும் ஆயிரம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்குத் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி,ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்வில் பேசும்போது, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைத்து திட்டங்களும் மக்களுக்குச் சென்றடையும் வகையில் அனைவருக்குமான அரசு என்ற அடிப்படையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார் என பேசினார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி ஒன்றை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு போன்ற தொடர்ச்சியாகத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. திமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட ஆடம்பர செலவுகளைச் செய்வதைத் தவிர்த்து விட்டு அந்த நிதியைக் கொண்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.







