மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான மொத்த மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18. இதில் திமுக 10 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வைத்துள்ளன. அதில் திமுக உறுப்பினர்கள் 3 பேர், அதிமுக உறுப்பினர்கள் 3 பேருக்கான இடங்களுக்குமான பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்த பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளும் கட்சியான திமுக அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவின் 4 இடங்களில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மற்ற 3 இடங்களுக்கு தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரின் பதவிக்காலம் ஓராண்டுக்குள் நிறைவு பெற்றதால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற குறையை போக்க வடக்கு மாவட்டச் செயலாளரான கல்யாண சுந்தரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக மாநிலங்களவைத் தேர்தல்களின்போது ஒரு வழக்கறிஞருக்கு வாய்ப்பளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. வில்சன், என்.ஆர்.இளங்கோ என்ற அந்த வரிசையில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் முழுமையாக நிறைவுபெற்றதால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.