வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் விபரங்களை இணைப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுஷில் சந்திரா நேற்று பணி ஓய்வு பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய பதவி காலத்தில் இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். முன்பு, வாக்காளர் பட்டியலில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுடைய பெயரை பதிவு செய்வதற்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதை ஆண்டுக்கு 4 முறையாக மாற்ற பரிந்துரைத்தோம். இதற்கான மசோதா நிறைவேறியுள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விபரங்களை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை ஒழிக்க முடியும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயமில்லை. இருந்தபோதிலும், ஆதார் விபரங்களை இணைக்காததற்கு நியாயமான காரணங்களை தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த இரண்டு சீர்திருத்தங்களும் கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. எனது பதவி காலத்தின் போது இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த பெருமையளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், என்னுடைய பதவிக் காலத்தில் சந்தித்த மிகப் பெரிய சவால், உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தியது தான் என கூறிய அவர், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையிலும், அந்த சவாலை தேர்தல் ஆணையம் மிக சிறப்பாக கையாண்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது என தெரிவித்தார்.