திமுக தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அக்கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. பல்வேறு மாவட்டங்களில், மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற நிர்வாகிகள் தீவிர முனைப்பில் உள்ளனர். இந்நிலையில், மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் திமுக தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பு ஜூன் 1ஆம் தேதி வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து 2ஆம் தேதி மனுத்தாக்கல் நடைபெறுகிறது. அன்று மாலையே தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி இருக்கும் எனத் தெரிகிறது. அதற்கு மறுநாள் 3ஆம் தேதி ஒமந்தூரார் அரசு தோட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவார்கள் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை மாநாடுபோல் நடத்த வேண்டும் என முதல்வர் விரும்புகிறாராம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூடவுள்ளதாக தெரிகிறது. அப்போது திமுகவின் எதிர்காலம் குறித்து பல்வேறு திட்டங்களை முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் அறிவிப்பார் எனத் தெரிகிறது. திமுகவில் இளைஞர்கள் அதிகளவில் இணையும்விதமாக அவரது அறிவிப்புகள் இருக்கும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர் அணி சார்பில் கல்வி குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டதுபோல், இளைஞரணி சார்பில் மாவட்டந்தோறும் கல்லூரி மாணக்கர்களை குறிவைத்து பல்வேறு கூட்டங்கள் போன்றவை அதிகளவில் இருக்கும் எனத் தெரிகிறது. புதிய நிர்வாகிகள் பட்டியலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப பல்வேறு அணிகளில் முக்கிய பொறுப்பிற்கு இளைஞர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிக இளைஞர்களை கட்சியில் சேர்ப்பவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கவும் திமுக முடிவு செய்துள்ளது.