திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தலைவர் பொறுப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுகவின் ஒன்றிய, நகர, நகரிய, பேரூர், பகுதிக் கழக, மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் பொதுக்குழு சென்னை அமைந்த கரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் அக்டோபர் 9ம் தேதி நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுகவின் உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், பொதுக்குழுவில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
7 பொறுப்புகளுக்கான வேட்புமனுக்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறுகின்றது. போட்டியிடுபவர்களை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஐவர் முன்மொழிய, ஐவர் வழிமொழிய வேண்டும், வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் மாவட்டச்செயலாளர்கள் சார்பாக, திமுக தலைவர் – மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் – துரைமுருகன், பொருளாளர் – டி ஆர் பாலு ஆகியோர் பெயரில் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் அமைச்சர் நாசர் தலைமையில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பாக 34 மனுக்கள் தாக்கல் செய்து ரூ.17 இலட்சம் வேட்புமனு கட்டணமாக செலுத்தப்பட்டது. திமுக தலைவர் பொறுப்பிற்கு ஸ்டாலினும், பொதுச்செயலாளருக்கு துரைமுருகன், பொருளாளருக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
பின்னர், கலைஞர் அரங்கம், அறிவாலய வளாகத்தில் தொண்டர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். முன்னதாக அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.