தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளை அதிகரிக்கக் கோரி, திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனா காரணமாக, இந்திய விமானப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது. சில மாதங்களாக சென்னை-திருச்சி- சிங்கப்பூர் விமான போக்குவரத்து ரத்து செய்யப் பட்டுள்ளன.
இதன் காரணமாக, சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்கள் பலர் அங்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 5 மாதமாக முகாம்கள் நடத்தப் பட்டு 2 டோஸ் தடுப்பூசிகளை பலர் செலுத்தியுள்ளனர். இருந்தாலும் தமிழ்நாட்டு விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் விமான ஆணையம் முழுமையாக நீக்கவில்லை. அதோடு சென்னை- திருச்சி- சிங்கப்பூர் விமான சேவைகளையும் குறைவாக இயக்கி வருகின்றனர்.
இதனால், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழக பயணிகளுக்கான கட்டுப்பாடு களை தளர்த்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளை அதிகப்படுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். இதையடுத்து அவருக்குப் பதில் அனுப்பியுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை, உங்கள் கடிதம், சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வரும் 29 ஆம் தேதி முதல், 2 டோஸ் செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் கிடையாது என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது







