மரக்காணம் அருகே சொகுசு கார் சாலை தடுப்பில் மோதியதில் திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மாநிலங்களவை எம்பி என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் பணி நிமித்தமாகச் சென்னையிலிருந்து காரில் தனது நண்பருடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அவர் பயணித்த கார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த என்.ஆர்
இளங்கோவின் மகன் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரது நண்பர் புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், என்.ஆர்.இளங்கோவின் அன்பு மகன் ராகேஷ், சாலை விபத்தில் உயிரிழந்த துயரச்செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானதாகத் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்த ராகேஷின் உடலுக்கு புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.