”தமிழ்ப் பற்றை பிரிவினைவாத, பிழைப்புவாத அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது திமுக” – அண்ணாமலை கடும் தாக்கு

”திமுகவானது தமிழ்ப் பற்றை, பிரிவினைவாத மற்றும் பிழைப்புவாத அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கோயம்புத்தூர் செம்மொழி பூங்கா திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், திறப்பு விழா நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில், இந்த செம்மொழிப் பூங்காக்கள், தமிழ் மொழியைப் போற்றுவதற்காக அமைக்கப்படுகின்றன என்று திமுக கூறுவதுதான் இதில் நகைமுரண்.

உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ்ப் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது திமுக. அதனால்தான், தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக அரசு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட உரைக்கவில்லை.

இனியாவது, வெறும் உதட்டளவில் தமிழ்ப் பற்று பேசாமல், உண்மையாகவே தமிழ் மொழி மீது அக்கறை காட்டும்படி, முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.