கடம்பூர் பேரூராட்சியில் நடைபெற்ற 9 வார்டுகளுக்கான தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் கடந்த பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இத்தேர்தலில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள், விதிகளை பின்பற்றாததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஆணையம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் உத்தரவிட்டது.
கடம்பூர் பேரூராட்சியில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மீதமுள்ள 9 வார்டுகளுக்கான தேர்தல் செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நடைபெற்ற தேர்தலில், வாக்குப்பதிவு நிறைவுபெற்று, வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. திமுக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் மதிமுக தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றது. ஒரு வார்டை சுயேட்சை வேட்பாளர் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, கடம்பூர் பேரூராட்சியைக் கைப்பற்றியது.
மொத்தமுள்ள 12 வார்டுகளில், திமுக – 6, காங்கிரஸ் – 1, மதிமுக – 1, சுயேட்சை – 4 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில், தொகுதியை தன்னிடம் வைத்துள்ள அதிமுகவும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தை தன்வசம் வைத்துள்ள அமமுகவும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.