தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளாக நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி திக்கெட்டும் கஞ்சா புழக்கம் அதிகரித்து, தமிழக இளைஞர்களின் வாழ்வைச் சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து வருவது கொடூரமானது.
தனது திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும் மக்கள் நலனையும் ஒருசேர கொன்றுவிட்டு, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று அறிவாலயம் அரசு சூளுரைக்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







