திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள்தான். ஆனால், நாங்கள் பயணிக்கும் பாதை வேறு. அதிமுக தலைமையில் பிரச்னை உள்ளது போல்மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மீண்டும் இருவரும் இணைய வாய்ப்புள்ளதா என்கிற கேள்விக்கு, “அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம். தொண்டர்களை யாரும் பிரிவுபடுத்தி பார்க்க முடியாது. எங்களை பொறுத்த வரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக எம்ஜிஆர் சட்ட விதிகளை உருவாக்கினாரோ அந்த சட்ட விதிகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே இப்போதைய தர்மயுத்தம்” என்று கூறினார்.
அதிமுகவை பாஜக மிரட்டுகிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது என்று பதிலளித்தார். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு இருந்தால் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு ? அப்படி வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக சந்திப்பேன் என்றும் கூறினார்.