தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார் சசிகலா. கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு பெங்களூரு தேவனஹள்ளியில் ஓய்வெடுத்தார். கடந்த 8ஆம் தேதி காலை பெங்களூருவில் இருந்து சாலை மார்கமாக தமிழகம் கிளம்பிய அவர், வழிநெடுக தொண்டர்களின் வரவேற்பை ஏற்று 23 மணி நேரம் பயணித்து நேற்று காலை சென்னை வந்தார்.
வாணியம்பாடியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, அடக்குமுறைகளுக்கு தான் அடிபணிய மாட்டேன் எனவும், தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்தார். ஓரணியில் நின்று பொது எதிரியை சந்திக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் சசிகலாவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா வருகை பற்றி கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவை ஒரு பெண்ணாக நின்று வரவேற்கிறேன் எனக் கூறியிருந்தார்.
தற்போது சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசிக்கும் நிலையில், அவரை பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருந்துவருவதாக பிரேமலதா உள்ளிட்டோர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.







