தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகமாக மாசு காணப்படும் மாநிலமாக டெல்லி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக பட்டாசு வெடிக்கப்படுவதால் ஒருநாளிலேயே மாசு அதிகமாகும் சூழல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க மற்றும் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 3 வருடங்களாக தீபாவளியின் போது டெல்லியில் சுற்றுச்சூழல் கடும் பாதிக்குள்ளானது. அதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டைப் போலவே, அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.







