ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வயநாட்டு கல்பேட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.
இதையும் படிக்கவும்: நாடாளுமன்றத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்த திமுக எம்பிக்கள்!
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
ராகுல்காந்தியின் இந்த தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வாயில் கருப்பு துணிக் கட்டியும், ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டு தொகுதிக்குட்பட்ட கல்பேட்டா என்னும் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ஷாபி பரம்பில் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு இந்த தீப்பந்த பேரணியில் ஈடுபட்டனர்.







