தான் அழைத்த பொதுக்குழுவுக்கு தானே தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆண்மையுள்ள கட்சித்தலைவரா? என திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி என புகழாரம் சூட்டினார். தனது உழைப்பு, ஆட்சியின் மூலம் மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக உருவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என கூறினார்.
3 முறை முதலமைச்சர் என்று சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரா? என்ற அவர், மாவட்ட ஆட்சியர் விடுமுறையில் செல்லும் போது, பி.ஆர்.ஓ. ஆட்சியர் வேலையை கவனித்து கொள்வார் ஆனால் அதற்காக அவர் தன்னை ஆட்சியர் என்று சொல்ல முடியுமா என விளக்கம் கொடுத்தார்.
தான் அழைத்த பொதுக்குழுவுக்கு, தானே தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆண்மையுள்ள கட்சித்தலைவரா? என்றும் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார். சட்டத்தை பற்றி சொல்லி ஓ.பன்னீர்செல்வத்திடம் இருப்பதை பிடுங்க ஓர் கூட்டமே இருக்கிறது என்றார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சொத்தான அதிமுக தலைமைக் கழகத்தை அபகரிக்க நினைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் மிகவும் கேவலமானது என தெரிவித்த அவர், ஆண்மையிருந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வேண்டும் என்றும் போட்டியிட்டு தொண்டர்கள் ஆதரவு இருப்பின் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்