தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் தலைமையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கட்சிக்கட்டமைப்பை வலுப்படுத்துவது, மய்யம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய களப்பணிகள் குறித்து கமல்ஹாசன் விரிவாக உரையாற்றினார். உரையின் இறுதியில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்தோடு பல கட்டங்களாக தமிழகமெங்கும் மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்க விரும்புவதாகவும், அந்த சுற்றுப்பயணத்திற்கான திட்டமிடலை விரைவுபடுத்தவும் நிர்வாகிகளை வலியுறுத்தினார்.
கட்சிக்கட்டமைப்பை கூடுதல் கவனத்தோடு வலுப்படுத்த வேண்டிய மாவட்டங்களை நோக்கி முதலில் பயணிப்போம் என்று மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 2024 தேர்தலுக்குத் தயாராகும் வண்ணம் ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டிகள் அமைத்தல், கமல்ஹாசனின் வலியுறுத்தலால் நிறைவேற்றப்பட்ட ஏரியா சபை சட்டத்திற்கு வரவேற்பு; சட்டத்தை வலுப்படுத்த வலியுறுத்தல்; விரைவில் பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்படவேண்டும்; அரசுப்பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேரும்போது கொடுக்கப்படும் ரூ.1000 உதவித்தொகைக்கு வரவேற்பு; காவிரியில் மேகேதாட்டு அணை கட்ட முற்படும் கர்நாடகத்திற்கு கண்டனம்; நெல் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு போதிய கொள்முதல் நிலையங்கள் திறத்தல்;
ஊழலுக்குத் துணைபோன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கவேண்டும்; சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தேவையான வசதிகளை செய்துகொடுத்தல்; சுங்கச்சாவடிகளை படிப்படியாகக் குறைத்தல்; கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்; தமிழக மாநிலக் கல்வி கொள்கையானது உலகத்தரத்தில் அமைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
– தினேஷ் உதய்







