மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2500 அபராதம்!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பிரபல பேச்சாளருமான திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி…

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பிரபல பேச்சாளருமான திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சென்னை போக்குவரத்து காவல்துறை மோட்டார் வாகன விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து காவல்துறைக்கு சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு உரிய விசாரணை நடத்தி குற்றம் நிருபிக்கப்பட்டால் உடனடியாக அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று முன்தினம் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று, தமிழ்நாடு அரசு இலட்சினை பொருத்தி சென்றுள்ளது. அந்த காரில் கருப்பு ஸ்டிக்கர் அடர்த்தியாக ஒட்டப்பட்டு, பம்பர் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாகன எண் பலகை சரியாக இல்லை என கூறி ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்திருந்தார்.

அதனை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்த சென்னை போக்குவரத்து போலீசார் அந்த காருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாயும், வாகன எண் பலகை முறையாக இல்லாததால் 1500 ரூபாயும், பம்பர் பொருத்தப்பட்டதற்காக 500 ரூபாயும் என மொத்தம் 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான சலானை புகார் அளித்தவருக்கு, போக்குவரத்து காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

மேலும் அந்த கார் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு சொந்தமானது எனவும், அவர் அரசு பதவியில் இருப்பதால் தமிழக அரசின் இலட்சினை தனது சொந்த காரில் பொறுத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.