மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதிக்கும் வகையில் சீமான் பேசினாரா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி” என கூறியதாக சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இங்கு காண்போம்.  

This News Fact Checked by ‘Telugu Post

சமீப காலமாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கும், திராவிட கொள்கைக்கும் எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இதனால் பலரின் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ஆயுர்வேதத்தில் கோமியம் ‘அமிர்த நீர்’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு மருந்து எனச் சொல்லப்படுகிற மாட்டின் சிறுநீரான கோமியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.” என்று பேசினார்.

இந்நிலையில்  ‘மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி’ என சீமான் கூறியதாக சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது. News18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றை, “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி. – பாஜக வளர்ப்பு நா*ய் சீமான்” என்ற வாசகத்துடன் எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இணையத்தில் பகிரப்படும் பதிவின் இணைப்பு;

உண்மை சரிபார்ப்பு; 

இந்தப் பதிவை ஆய்வு செய்த தெலுங்கு போஸ்ட் உண்மை கண்டறியும் குழு, சீமான் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் குறித்து தவறான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதை கண்டறிந்தது. ‘News18 தமிழ்நாடு’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த வீடியோ, சன் நியூஸ் சேனலின் முகநூல் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது.

பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, கோமியம் விவகாரம் தொடர்பாக சீமான் பேசியதாவது; “இந்த பைத்தியங்களிடம் நாடும், நாட்டு மக்களும் சிக்கி கொண்டோம்.. வேறு என்ன செய்ய முடியும்?.. மாட்டுப்பால் குடிப்பவன் இடைசாதி, மாட்டுக்கறி தின்பவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிப்பவன் உயர்சாதி.. இதுதான் இந்த நாட்டின் கட்டமைப்பு.. இந்தியாவில்தான் நெய் எரிக்கப்படுகின்றது, பால் கீழே கொட்டப்படுகின்றது, மூத்திரம் குடிக்கப்படுகின்றது. இந்த நாட்டில் நீ சிக்கி கொண்டாய், நானும் சிக்கிக்கொண்டேன்”. என கூறியுள்ளார்.

தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட வீடியோவையும், செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட உண்மையான வீடியோக்களையும் ஒப்பிட்டு பார்த்ததில், சீமான் சொன்ன கருத்துக்களை தவறாக சித்தரிக்க முயற்சித்தது தெரியவந்தது.

முடிவு; 

இதன்மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறவில்லை என்பது நிரூபனமானது. எனவே சீமான் கருத்துகள் என பரப்படும் இந்த வீடியோ தவறானது என்பது கண்டறியப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.