உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற இருந்த உலகக்கோப்பை டி20 தொடர் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் 17ம் தேதி டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட்கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர் இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரையில் ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியின் சேர்க்கப்படவில்லை.
மாற்று வீரர்களாக தீபக் சாகர், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/BCCI/status/1435629927928315904
முக்கிய அறிவிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டி20 உலக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








