‘தங்கர்’ சமூகத்தினரை பட்டியல் பிரிவில் சேர்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உள்ளிட்ட சிலர் 3வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் நீண்ட காலமாகவே ‘தங்கர்’ இனத்தவர், தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வகுப்பில் சேர்க்குமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மகாராஷ்டிராவின் தலைமைச் செயலகமான மந்திராலயத்தில் இன்று (அக். 4) முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். அப்போது, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உள்ளிட்ட சிலர் ‘தங்கர்’ சமூகத்தினரை பட்டியல் பிரிவில் சேர்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், முதலமைச்சரின் பதிலால் அவர்கள் திருப்தி அடையவில்லை. இதனையடுத்து, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் 3 எம்.எல்.ஏ. க்கள் சட்டப்பேரவை கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்தனர். தடுப்புக்காக வலை வைக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பான சூழல் நிலவியது.







