என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் விலை நிலங்களை பறிக்கக்கூடாது எனவும் தமிழ்நாட்டிலிருந்து என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ”என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துகாக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் அனைத்தும் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தர கூடியவை. அதனால் அந்த நிலங்களை விட்டுத்தர உழவர்கள் விரும்பவில்லை. என்.எல்.சி தரப்பிலும் இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கூட அவை எதுவும் வெற்றி பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ”பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் திட்டத்தின் கீழ் என்.எல்.சி நிறுவனம் அடுத்த இரு ஆண்டுகளில் அதாவது 2025-ம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியும் தொலைவில் என்.எல்.சி. நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிந்தே, அந்த நிறுவனத்துக்கு உழவர்களின் நிலங்களை பறித்து தருவது நியாமல்ல” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்தவித முதலீடுகளும் என்.எல்.சி செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “ஆண்டுக்கு 11,592 கோடி வருவாய் என்.எல்.சி ஈட்டி வருகிறது. ஆனால் ராஜஸ்தான், ஒடிஷா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முதலீடு செய்கிறது. கடலூர் மாவட்டத்துக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் எந்த வகையிலும் பயன்படாத கடலூர் மாவட்டத்துக்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்.எல்.சி நிறுவனத்துக்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது. என்.எல்.சிஐ தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திடமிருந்து விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.