இலங்கையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், அரசு பணியாளர்களுக்கு, அந்நாட்டின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கையில் சீதுவ, குண்டசாலை, வத்தேகம, குளியாப்பிட்டிய, வாரியபொல, பதுளை, பசறை, வெலிமடை, பெல்மடுல்ல, கலிகமுவ உள்ளிட்ட74 பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவல் அபாய கட்டத்தில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் சுகாதார அமைச்சகத்தின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 642 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு பரவலை கட்டுப்பதுத்த வழி:
சுற்றுப்புற சீர்கேடே டெங்கு பரவலுக்குக் காரணம் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம் சுற்றுப்புறத்தை சுத்தமாக பேணுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பாதியில் நிறுத்தப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரே டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணம் என்பதால், அவற்றை கண்டறிந்து தண்ணீர் தேங்குவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
விடுமுறையில் உள்ளவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்:
இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசு பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமையும் கூடுதல் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையில் இருக்கும் அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் டெங்கு கொசு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கையின் சுகாதாரத்துறை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த 2020ம் ஆண்டில், 31,000 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 25,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதரத்துறை சங்கம், டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது.
எனவே, அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறையை பயன்படுத்தி விடுமுறையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த தோட்டங்களையும் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்ய அன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெள்ளிக்கிழமையான இன்று இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.