“தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது!” – பாரிவேந்தர் அறிக்கை!

தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது என்றும் தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது…

தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது என்றும் தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கும்,  இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.

பாரிவேந்தர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு 1,61,866 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக பாரிவேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில்,  பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் சின்னத்தில், போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மத்தியில் ஆட்சி அமைக்கவிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், பிரதமர் மோடிக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை,

இன்மை புகுத்தி விடும்”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ள டாக்டர் பாரிவேந்தர், முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை,  முயற்சி தான் சிறப்பான காரணங்களுக்கு செயல்பாடாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளாக பெரம்பலூர் தொகுதி மக்களுக்கு தொண்டாற்ற வாய்ப்பளித்ததற்கு பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளால் இந்திய ஜனநாயக கட்சி சோர்வடையாது என்றும் தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.  2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான,  படிப்பினை தமக்குக் கிடைத்திருப்பதாக பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.  மக்களுக்கான கல்வி,  மருத்துவ சேவை தொடர்ந்து கிடைத்திடும் வகையில் பணியாற்ற உள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின்போது அல்லும்,  பகலும் அயராது உழைத்த ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி,  தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,  புதிய நீதிக்கட்சி,  இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பாரிவேந்தர் நன்றி தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது ஆதரவளித்த ஊடகத்துறையினர்,  காவல்துறையினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  மேலும் பெரம்பலூர் தொகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பாரிவேந்தர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.