அமலாக்கத்துறையின் புதிய சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.     டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி…

டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.  

 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.  கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது.  இதில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ,  கடந்த ஆண்டு அவரை கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து,  அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.  8 முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.  இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது.  இதையடுத்து அவர் கடந்த 16ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  இதில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து,  மற்றொரு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.  அந்த ஒப்பந்தம் தொடர்பாக நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.   இந்நிலையில்,  இந்த சம்மனையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.