பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறை பயணமாக 5 நாட்கள் மங்கோலியா மற்றும் ஜப்பானுக்கு நாளை செல்கிறார்.
கிழக்கு ஆசிய நாடுகளுடனான மூலோபாய கூட்டுறவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் பயணமாக மங்கோலியா செல்கிறார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பதிவில், பாதுகாப்பு மற்றும் மூலேபாய கூட்டுறவு மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக கூட்டு நாடுகளான மங்கோலியா மற்றும் ஜப்பானுக்கு அரசுமுறை பயணமாக செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை செல்வதை மிகவும் ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன். மேலும் டோக்கியோவில் நடைபெறும் 2+2 அமைச்சர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
https://twitter.com/rajnathsingh/status/1566309773762793472
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய கூட்டுறவு மேலாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும். தமது பயணத்தின் போது மங்கோலியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜென்ரல் சைகான்பயருடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார். மங்கோலிய அதிபர் மேதகு யூ. குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற சபைத் தலைவர் மேதகு ஜி. ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியாவும் மங்கோலியாவும் மூலோபாய கூட்டுறவு மேலாண்மையை பகிர்வதோடு அதில் ராணுவம் முக்கியத் தூணாக விளங்குகிறது. இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது







