ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் என மொத்தம் 13 வீரர்கள் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் பயிற்சிக் கட்டளைத் தளபதி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் ஆற்றிய உரை: “பகல் 12.15 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்க வேண்டும். ஆனால், 12.08க்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏர் மார்ஷல் சவுத்ரி நேற்றிரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார். விபத்து குறித்து முப்படை விசாரணை மேற்கொள்ளப்படும்.

13 ராணுவ வீரர்களின் உடல்களும் இந்திய விமானப்படையின் தனி விமானங்கள் மூலம் டெல்லி கொண்டுவரப்படும். முழு ராணுவ மரியாதையுடன் ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.