அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்தி இன்று சூரத் செல்கிறார். அவருடன் அவரது தங்கை பிரியங்கா காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தியும் வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்வதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு செல்ல உள்ளார். அவருடன் அவரது தங்கை பிரியங்கா காந்தியும் உடன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்திற்கு இன்று மதியம் 2 மணிக்கு வர உள்ளதால், அவரது வழக்கறிஞர்கள், காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் முன்கூட்டியே சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முகாமிட்டுள்ளனர். ராகுல் காந்தியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோருவார் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளனர்.
ராகுல் காந்தி இன்னும் சிறிது நேரத்தில் சூரத்திற்கு புறப்பட உள்ள நிலையில் அவரை பார்ப்பதற்காகவும், மகனை வழியனுப்பி வைப்பதற்காகவும், ராகுல் காந்தியின் அம்மா சோனியா காந்தி, அவரது இல்லத்திற்கு, மகள் ப்ரியங்கா காந்தியுடன் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா