புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமாதேவி தொண்டைமானின் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், மன்னர்கள் நமது நாட்டை ஆட்சி செய்த நிலையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தை தொண்டைமான் மன்னர்கள் ஆட்சி செய்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டபோது எந்த சலுகையையும் பெறாமல் கருவூலத்தில் உள்ள பொன்னும் பொருளையும் அப்படியே ஒப்படைத்த சிறப்பு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உண்டு.
அப்பேற்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜ மாதாவும் தற்போதைய கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாருமான ராணி ரமாதேவி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 85. ராணியின் உடல் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தினர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி தொண்டைமானின் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமான் அவர்களின் மனைவியார் ராணி திருமதி ரமாதேவி அவர்கள், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்திய தகவலறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








