நடிகர் வடிவேலுவில் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வரும் நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் (52), அண்மைக் காலமாக கல்லீரல் செயலிழந்து உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை ஜெகதீஸ்வரன் காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஜெகதீஸ்வரனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படியுங்கள் : சாலையோர உணவகங்களுக்கு ரேட்டிங் – போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!!
இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் நடிகர் வடிவேலுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.







