விசாரணை கைதி மரணம்: காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம்

சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம்…

சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அண்மைகாலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் மாறியது. அந்த சுவடு அழிவதற்கு முன்பே மீண்டும் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உடல் நிலை பாதித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/news7tamil/status/1536159792959737856

ராஜசேகரன் உண்மையிலேயே உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தாரா? அல்லது விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தாரா? என்பது காவல்துறையின் உயரதிகாரிகள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிபிசிஐடி விசாரணை

இதனிடையே, ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்: மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது என்று தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.