தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நிரம்பிய நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் வயல்வெளி வழியாக செல்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக திருத்துறைபூண்டி, வரம்பியம், ஆலத்தம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரில் நடவுசெய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தேங்கியுள்ள நீர் வடிய வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து கடந்த 10 தினங்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 21 சென்டிமீட்டர் மழை திருத்துறைப்பூண்டி பகுதியில் பெய்துள்ளது.
திருவாரூர் 18செ.மீ, மன்னார்குடி 14செ.மீ, முத்துப்பேட்டையில் 13சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நன்னிலம் 13 செ.மீ வலங்கைமான் 12செ.மீ நீடாமங்கலம் 11செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக திருத்துறைபூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விட்டுகட்டி, வரம்பியம், மணலி, ஆலத்தம்பாடி, திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளான தப்பளாம்புலியூர் சேமங்கலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெல் பயிர் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மேலும், ஆறுகளில் தண்ணீர் குறைவாக செல்வதால் தண்ணீர் வடியும் வாய்ப்பு இருந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மத்தியில் இந்த கனமழை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விடாமல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.