சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் வசித்து வந்தவர் மருத்துவர் நரேந்திர தபோல்கர். இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை நடைபயிற்சி சென்ற போது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக புனே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
பின்னர் இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் மருத்துவரான வீரேந்திரசிங் தாவடே, சரங் அகோல்கர், வினய் பவார், சச்சின் ஆண்ட்ரே, சரத் கலாஸ்கர், சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கர்இந்தக் கொலைச் சம்பவத்தில் தாவடே தான் முக்கிய குற்றவாளி என சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சச்சின் ஆண்ட்ரே மற்றும் சரத் கலாஸ்கர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ.5 லட்சம் அபராதம் செலுத்தவும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மருத்துவர் வீரேந்திர சிங் தாவ்டே, சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பாவே, இந்த வழக்கில் ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர் ஆகிய மூவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








