டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்த வழக்கில், அவரது கார் ஓட்டுநர் அனய்தா பண்டோல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கடந்த செப்டம்பர் மாதம் 6 -ம் தேதி குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து மும்பைக்கு காரில் சென்றார். அப்போது பால்கர் மாட்டம் சூர்யா நதி பாலத்தின் மீது கார் சென்று கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் சைரஸ் மிஸ்த்ரி மற்றும் அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் ஆகியோர் உயிரிழந்தனர். காரை ஓட்டி சென்ற அனய்தா பண்டோல் மற்றும் உடன் பயணித்த டார்யஸ் பண்டோல் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, சைரஸ் மிஸ்த்ரி உயிரிழப்பு குறித்து 7 பேர் கொண்ட தடயவியல் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் சோதனை நடத்தினர். மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், காரை ஓட்டி வந்த அனய்தா பண்டோல் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனக்குறைவாக காரை ஓட்டி வந்ததாலும், அதி வேகமாக ஓட்டி சென்றதாகவும், மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது போன்று வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்து தொடர்பாக மண்டல போக்குவரத்து அலுவலகம் மற்றும் புணே பென்ஸ் கார் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் போலீஸ் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.








