மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை படிப்புகளுக்கு சேருவதற்காக நடத்தப்பட்ட CUET நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் புதிய கல்விகொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை CUET பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 500 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 2 நகரங்களிலும் CUET நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
அதன்படி, கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 6 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை, தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நாடு முழுவதும் சுமார் 60 சதவிகித மாணவர்கள் எழுதினர். மத்திய பல்கலைக்கழகளின் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள் நேற்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை வெளியான நிலையில் அதன் முடிவுகளை, தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு எழுதியவர்களின் விவரங்கள், தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.







