ஐபிஎல் 2023 சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டித் தூக்கிய நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில், இரவு 11 மணி வரை மழை பெய்ததால், நேற்றைக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அறிவித்தபடி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 96 ரன்களும், விரித்திமான் சாஹா 54 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 பந்துகள் எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் இரவு 12.10 மணிக்கு தொடங்கிய போட்டி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனால் சென்னை அணி வெற்றி பெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெயிக்வாடும், டெவன் கான்வேயும் கைகோர்த்து நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தினர். 26 ரன்னில் கெய்க்வாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹானே, ராயுடுவும் ஆட்டமிழக்க, கேப்டன் தோனி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இறுதி ஓவரில் ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா களமாடினர். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 1 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி அடித்த ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதிசெய்தார். இதன்மூலம் 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸின் சாதனையை சமன் செய்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பெரிய எல்இடி திரையில் சென்னை அணி மற்றும் குஜராத் அணி மோதிய ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி ரசிகர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் தங்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். விடிய விடிய கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.
சென்னையின் வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே ரசிகர்கள், அடுத்த ஆண்டும் சிஎஸ்கே தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். தோனி அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவார் என்று கூறிய ரசிகர்கள், சென்னை அணியின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.