அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்தவர்களை, வளர்ந்தவர்களை அபகரித்து தன் அருகில் வைத்துக்கொண்டே அதிமுகவை விமர்சிப்பது சர்வாதிகார போக்கின் உச்சம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதலமைச்சரைச் சாடியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோவை, பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்குச் சென்று நலத்திட்டம், பொதுக்கூட்டங்களில் பேசிய விதம் முரணானது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இபிஎஸ் ஆளுங்கட்சியின் அவல நிலை, நிர்வாக சீர்கேட்டு, மக்கள் விரோதப் போக்கு, அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாது, அம்மா திட்டங்களுக்கு மூடு விழா, 150 சதவீத சொத்து வரி உயர்வு, 52 சதவீத மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீரழிவு, காவல்துறை சுதந்திரமாகச் செயல்படவில்லை இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் என்று ஆதாரத்துடன் புள்ளிவிவரத்துடன் தொடர் அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஆட்சியின் அவல் நிலையை எடுத்துக் கூற எதிர்க்கட்சித் தலைவருக்குத் தார்மீக உரிமை உண்டு. ஆனால், இன்றைக்கு முதலமைச்சர் நான் பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்டு வளர்ந்தவன் என்று கூறுகிறார். ஆனால் தற்போது அதிமுக கேள்வி கேட்பதற்கு எந்த தகுதி இல்லை என்று கூறியுள்ளார். மேலும், அதிமுகவில் பயிற்சி பெற்று, அதனால் வாழ்வு பெற்று, அதிகாரம் பெற்று, தன் கையில் பச்சை குத்திக் கொண்டு இருந்தவர்களைக் காலத்தின் கோலத்தால், தொண்டர்களின் உழைப்பால் கோபுர கலசத்தில் உயர்ந்தவர்களை நீங்கள் அபகரித்தை என்னால் பட்டியலிட்டுச் சொல்ல முடியும், உதாரணமாக எ.வ. வேலுவில் தொடங்கி செல்வகணபதி, கே எஸ் எஸ் ஆர், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கம்பம் செல்வேந்திரன், சத்தியமூர்த்தி, தென்னவன், ரகுபதி,பழனியப்பன், தங்கத் தமிழ்ச்செல்வன் தற்போது செந்தில் பாலாஜி வரை பட்டியலிட்டுச் சொல்ல முடியும் தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்தவர்களை, நெருக்கடி கொடுத்து அபகரித்து தன் அருகில் வைத்துக் கொண்டு, அதிமுக கேள்வி கேட்க என்ன தகுதி உள்ளது என்று முதலமைச்சர் கூறலாமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவிற்குத் தகுதி இல்லை என்று முதலமைச்சர் கூறுவது ஜனநாயக பாதையிலிருந்து சர்வாதிகார பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டாரா என்ற கேள்வி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர், திமுகவில் பயிற்சி பெற்றவர்களை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்யவில்லை, முதலமைச்சர் அதிமுகவை விமர்சனம் செய்தது கழகத் தொண்டர்கள் எல்லாம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
மேலும், திமுகவிலும் அதிகார போட்டி இருந்தது ஏன் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் அதிகார போட்டி இல்லையா, அதேபோல் வைகோ அதிகார போட்டியிலிருந்து திமுகவிலிருந்து செல்லவில்லையா, அண்ணா காலம் தொடங்கி எத்தனை அதிகார போட்டிகள் நடைபெற்றது என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது பேசிய நாகரிகம், கண்ணியம் இப்போது இல்லாமல் போனது ஏன்? உங்கள் இது போன்ற பேச்சை மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.